செய்திகள்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர் கொட்டுவதை பார்த்ததும் சுற்று வட்டார கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காததாலும் பருவ மழை பொய்த்ததாலும் இந்த ஆண்டு காவிரியில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது.

எப்போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகள் கடந்த சில மாதங்களாக வெறும் பாறைகளாக காட்சி அளிக்கின்றன. இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறையை யொட்டி வரும் சுற்றுலா பயணிகளின் வருகை சுத்தமாக நின்று போனது. சுற்றுலா பயணிகளை நம்பி இருக்கும் ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் மற்றும் அஞ்செட்டி, நாட்ரா பாளையம் உள்பட பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் குடகு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றிலும் புது வெள்ளம் சீறிப்பாய்கிறது.

இதை கேள்விப்பட்ட பென்னாகரம் உள்பட சுற்று வட்டார கிராம மக்கள் இன்று ஒகேனக்கல்லுக்கு திரண்டு வந்தனர். அங்குள்ள அருவியில் அவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

வெறும் பாறைகளாக தெரிந்த ஒகேனக்கல் அருவிகளில் இன்று தண்ணீர் கொட்டுவதை பார்த்ததும் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகளும் இன்று ஒகேனக்கல்லுக்கு திரள தொடங்கிவிட்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர சுமார் 6 மணி நேரம் ஆகும். தற்போது காவிரி ஆறு வறண்டு காணப்படுவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர தாமதம் ஆகும். இன்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.

மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக 20 கன அடிக்கும் குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. நேற்று காலை 14 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 21.68 அடியாக இருந்தது. இன்று காலையும் 14 கன அடி தண்ணீர் தான் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டம் 21.51 அடியாக குறைந்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது.