ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கனமழை பாதிப்புகள் காரணமாக புதுச்சேரி பல்கலைகழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.