தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனித்து 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட்டு, மார்க்சிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தவெக 116 எம்எல்ஏக்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி இரவு முதல் புதுச்சேரி பூரணாங்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்து,
சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணிநேர சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து 3-வது நாளாக நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்குள் சென்னை அதிமுக தலைமையகம் வர கட்சி தலைமை அறிவுறுத்தியது.
அதன்படி புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று இரவு முதல் ஒவ்வொருவராக புறப்பட தொடங்கினர். இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் விடுதியை காலி செய்தனர்.