சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதியில் 2-வது கட்டமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நாளை (ஞாயிற்றுக் கிழமை) வழங்கப்படுகிறது. 7.5 லட்சம் குழந்தைகளுக்கு 1640 மையங்களில் சொட்டு மருந்து வழங்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்தவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரெயில், பஸ் நிலையங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம் சென்னையில் குடியேறி தங்கி இருப்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு அழைத்து வரலாம்.
காலை 7 மணிக்கு தொடங்கி இடைவிடாமல் மாலை 5 மணி வரை மையங்கள் செயல்படும். சொட்டு மருந்து வழங்கும் பணியில் 6,700 ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முறையாக கொடுத்திருந்தாலும் நாளை நடக்கும் முகாமிலும் கொடுக்கலாம். 41 நடமாடும் மையங்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அதனால் பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதற்கு கட்டாயம் அழைத்து போட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளது. #Tamilnews