செய்திகள்

22 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கைது செய்தது

பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 22 மீனவர்களை அந்நாட்டின் கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

அராபிய கடலில் மீன் பிடிக்கும்போது தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியா  மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் எதிர்நாட்டை சேர்ந்த மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து வருகிறது.

அவ்வகையில், கடந்த அக்டோபர் மாதம் மற்றும் இந்த மாத துவக்கத்தில் 24 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 22   மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படை கராச்சி அருகேயுள்ள கடல் பகுதியில் நேற்று கைது செய்தனர். அவர்கள் சென்ற 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லந்தி கிளைச்சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இன்று கோர்ட்டில் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Pakistanarrests #Indianfishermen #Indianfishermenarrested