புபனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல் அங்குள்ள தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தரனிதர் பாண்டா என்பவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு சம்பல்பூர் ரெயில் தண்டவாளத்தில் பண்டா, அவரது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் சடலங்களாக கிடந்துள்ளனர். இதனையடுத்து, சடலங்களை மீட்ட போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
என்ன காரணத்திற்காக தரனிதர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரித்து வருவதாக தெரிவித்துள்ள போலீசார், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரனிதர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அவர் பணியாற்றும் பள்ளி இன்று ஒருநாள் விடுப்பு அறிவித்துள்ளது. நேற்று மதியம் தரனிதர் பள்ளியிலிருந்து அவசரமாக வெளியேறியதாக அவருடன் பணியாற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.