ராமநாதபுரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள் 
செய்திகள்

கொரோனா நோயாளிகளை குணமாக்கும் சத்தான உணவுகள்

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மருத்துவ சிகிச்சை மற்றும் சத்தான உணவுகளால் சிகிச்சை முடிந்து நோயாளிகள் குணமாகி வெளியில் வருகின்றனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

உலகெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா நோய் மக்களை உயிர்பலி வாங்கி வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் தளம் மற்றும் 2-வது தளம் ஆகியவற்றில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு தனித்தனி பிரிவுகளாக பிரித்து நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வார்டில் முறையான கவனிப்பு மற்றும் சுகாதார வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்பயனாக கொரோனா வார்டில் தினமும் தூய்மை பணி, மருத்துவ கவனிப்பு, உணவு என அனைத்து வசதிகளும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தொற்று பாதிக்கப்பட்ட நபர் கூறியதாவது:- ஆரம்பத்தில் சில குறைகள் இருந்த நிலையில் தற்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு உள்ளது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பரிசோதனை செய்து உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை சத்தான உணவுகள் வழங்கி நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகை செய்கின்றனர். குறிப்பாக பால், கபசுர குடிநீர், 2 முட்டை, வாழைப்பழம், நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை, சுண்டல், பயறு போன்றவைகளும், டிபன், சாப்பாடு போன்றவையும் தேவைக்கேற்ப வழங்குகின்றனர். இந்த சத்தான உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளதோடு மருந்து, மாத்திரைகளால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமாகி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சத்தான உணவுகளால் நோய் வந்துவிட்டதே என்று மனம் நொந்து போன நோயாளிகள் குணமாகி வெளிவருகின்றனர்.