இந்தியா

மும்பையில் மொஹரம் பண்டிகையின் போது வலி மாத்திரை என விஷமாத்திரை வழங்கிய நபர் கைது

பிரேம்ஜியின் ஆதார், கைபேசி மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மும்பை பாய்காலா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இஸ்லாமியர்களின் புனித மொஹரம் பண்டிகை நடைபெற்றது. அப்போது அந்த ஊர்வலத்தில் ஃபையாஸ் நிசார் பிரேம்ஜி என்பவர் சில மாத்திரைகளை விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

இதையடுத்து சந்தேகத்திற்குரிய அந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் வலி நிவாரணி மாத்திரைகளை விநியோகிப்பதாக கூறினார்.

எந்தவித அனுமதியும் இல்லாமல் அத்தகைய மாத்திரைகளை விநியோகம் செய்து வந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரின் ஆதார், கைபேசி மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து மறுநாள் விநியோகம் செய்யப்பட்ட மாத்திரையை சாப்பிட்ட ஒருவருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து சந்தேகத்திற்குரிய நபர் பிரேம்ஜி என்பவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆன்லைனில் 30,000 காலி கேப்சூல்களையும், 50 கிலோ துத்தநாக பாஸ்பைடையும் ஆர்டர் செய்து, ஒவ்வொரு கேப்சூலிலும் துத்தநாக பாஸ்பைடு நிரப்பி சுமார் 15,000 பேரை கொல்ல விரும்புவதாக காவல்துறையிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பிரேம்ஜியிடம் இருந்த 14,900 மாத்திரைகளையும் 50 கிலோ துத்தநாக பாஸ்பைடையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.