இந்தியா

மேற்கு வங்கம்: பணி நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கைது

சுஜித் போஸ் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாலும், உண்மைகளை மறைக்க முயன்றதாலும் கைது

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஜித் போஸ் அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுஜித் போஸ் கொல்கத்தாவின் சவுத் DumDum நகராட்சியின் துணைத் தலைவராக இருந்தபோது, சுமார் 150 பேருக்கு சட்டவிரோதமாக வேலை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் அவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு சுஜித் போஸ் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது சுஜித் போஸ் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாலும், உண்மைகளை மறைக்க முயன்றதாலும் அவரைக் கைது செய்ய நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்படவுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த அதிரடி கைது அரங்கேறியுள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிதான்நகர் தொகுதியில் போட்டியிட்ட சுஜித் போஸ், பாஜகவின் சரத்வத் முகர்ஜியிடம் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.