டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய ரிசர்வ் காவல்படை பதிலளித்துள்ளது.
கடந்த ஜூலை 20 அன்று, டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஒருபகுதியாக, நாடாளுமன்றம் நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அப்போது போராட்டக்காரர்கள்மீது பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே தகவல் கோரியிருந்தார்.
அவர் எழுப்பியிருந்த கேள்விக்கு சிஆர்பிஎஃப் இந்தப் பதிலை அளித்துள்ளது.
சிஆர்பிஎஃப் அமைப்பிற்கு பொதுவாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊழல் அல்லது மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களுக்கு மட்டுமே விதிவிலக்கு உண்டு.
ஆனால், இச்சம்பவத்தில் மனித உரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை என்று கூறி அதுகுறித்த விரிவான தகவல்களைத் தர சிஆர்பிஎஃப் மறுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் முதலில் டெல்லி காவல்துறையும், அரசும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என மறுத்தது. பின்னர் பெல்லட் துப்பாகி பயன்பாடு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானதும், மருத்துவமனை தரவுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றதும் உறுதியானது.
தொடர்ந்து பெல்லட் குண்டால் பாதிக்கப்பட்டு, வலது கண்பார்வையை இழந்த சாகில் லோச்சாப் இதுதொடர்பாக டெல்லி காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
ஆனால் பெயர் குறிப்பிடாமல் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, அதுவும் ராகுல் காந்தியின் தலையீட்டால்.
இந்நிலையில் சாகேட் கோகலே எழுப்பிய கேள்விக்கு சிஆர்பிஎஃப் இந்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளது.