இந்தியா

"அப்பா தான் அம்மாவை வெட்டுனாரு.." 8 மாத கர்ப்பிணி தாயை கொன்ற தந்தையை காட்டிக்கொடுத்த 5 வயது மகன்

கொலையை மறைக்க ஒரு பொய் கதையைக் கூறித் தப்ப முயன்றார்.

உ.பியில் 8 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் குடிபோதையில் கொலை செய்த நிலையில் அவரை 5 வயது மகனினே போலீசில் சிக்கவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மது - சூது

உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள பாஜ்ராரி கிராமத்தை சேர்ந்த ஹனீப் மன்சூரி மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்.

தனது பழக்கங்களுக்காகத் தன் நிலத்தின் பெரும் பகுதியை ஏற்கனவே விற்றுவிட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அதிகளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

கணவர் மீண்டும் மது அருந்துவதைத் த தடுக்க மனைவி மனிஷா முயன்றபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலை

இதில் ஆத்திரமடைந்த ஹனீப், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து 8 மாதக் கர்ப்பிணியான மனைவியை அவரது தலை, உடல் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை அவர்களின் 5 வயது மகனும், 2 வயது மகளும் நேரில் பார்த்து உறைந்து போயினர்.

கொலையை மறைக்க எண்ணிய ஹனீப், தானே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து ஒரு பொய் கதையைக் கூறித் தப்ப முயன்றார்.

மகன் வாக்குமூலம்

ஆனால், 5 வயது மகன், காவல்துறையினரிடம் தந்தை தான் அம்மாவை வெட்டிக் கொன்றார் என்றும் தான் அதை நேரில் பார்த்ததை வாக்குமூலமாகக் கூறினான்.

இதையடுத்து, பன்வாரியிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.

2 மற்றும் 5 வயதுக் குழந்தைகளின் கண் முன்னே 8 மாதக் கர்ப்பிணியை கணவன் வெட்டிக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கு தண்டனை

மனிஷாவுக்கு 2021இல் திருமணமான நிலையில், கணவர் ஹனீப் சந்தேகப் புத்தியால் அடிக்கடி அவரை அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும், பலமுறை வீட்டை விட்டுத் துரத்தியபோதும் குடும்பத்திற்காக மனிஷா பொறுத்துக்கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் அவரது சகோதரர் நசீம் மன்சூரி தெரிவித்தார்.

ஹனீபின் தந்தை பேசுகையில், "என் மகன் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துவிட்டான். அவனுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் தகும்" எனக் கூறினார்.

மேலும் தாய் இழந்த இரண்டு பேரக் குழந்தைகளையும் தானே வளர்க்கப்போவதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.