இந்தியா

லக்னோ தனியார் பயிற்சி மையத்தில் தீ விபத்து: மாணவர்கள் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

பயிற்சி வகுப்பில் உள்ள மாணவர்களை விரைந்து மீட்கும்படி உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

உத்தரபிரதேசம் பயிற்சி மையத்தில் தீ விபத்து:

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ அடுத்த புரானியா கிராமத்தில், தனியார் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.

இங்கு இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து, அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கும் வேகமாக பரவியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 14 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்படன. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், பயிற்சி வகுப்பில் இருந்த 11 மாணவர்கள் மாட்டிக்கொண்டு உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த விபத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் 10 முதல் 12 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.