இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று இரவு நடந்த கடுமையான மோதலில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
உதம்பூர் மாவட்டத்தின் மஜால்தா எல்லைக்குட்பட்ட சோஹன் மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப் ஆகிய படைகள் இணைந்து அந்தப் பகுதியை முழுமையாக வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கின.
வளைத்து பிடிக்க முயன்றபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாகப் பதில் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள், தீவிரவாதிகளின் தப்பிச் செல்லும் முயற்சியை முறியடித்து நள்ளிரவு முழுவதும் தீவிர எதிர்தாக்குதலைத் தொடர்ந்தனர்.
இன்று அதிகாலை வரை நீடித்த இந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களின் துல்லியமான அடையாளங்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய பாதுகாப்புப் படையினர் கூடுதல் வீரர்களை வரவழைத்து, பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.