மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த பிரபல இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், தற்போது புதிய திருப்பமாக அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி உரையாடல் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 18 ஆம் தேதி, 26 வயதான கேதன் அகர்வாலை அவரது காதலன் சேத்தன் சவுத்ரியுடன் சேர்ந்து, லோஹாகாட் கோட்டை மலை உச்சியிலிருந்து சியா கோயல் கீழே தள்ளிப் படுகொலை செய்ததாகப் புனே கிராமப்புற காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த கொடூரக் கொலை நடப்பதற்கு சுமார் 3 வாரங்களுக்கு முன்பு, அதாவது மே 25 ஆம் தேதியன்று சியா கோயல் தனது தோழி ஒருவருடன் நடத்திய ஸ்னாப்சாட் சாட்டின் ஸ்கிரீன்ஷாட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த உரையாடலில், ஒரு திருமணத்திற்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்காகத் தனது தோழியின் ஆதார் கார்டை சியா கோயல் கேட்கிறார். அதற்கு அவரது தோழி விபரம் கேட்கும்போது, "நடக்கவே போவதில்லை என்று எனக்குத் தெரிந்த ஒரு கல்யாணத்திற்காகத்தான் நான் டிக்கெட் புக் செய்கிறேன், நீ ஆதார் கார்டை மட்டும் அனுப்பு" என்று சியா கோயல் மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
கேதன் அகர்வாலுக்கும் தனக்கும் நடக்கவிருந்த திருமணத்தைத்தான் சியா கோயல் 'நடக்கப்போவதில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம், கேதனைத் திருமணம் செய்து கொள்ள சியாவிற்கு சம்மதம் இல்லை என்பதும், அவரை முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்ய சியாவும் அவரது காதலன் சேத்தனும் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்பதும் இந்த ஆதாரத்தின் மூலம் தெளிவாக நிரூபணமாகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் சியா மற்றும் சேத்தன் ஆகிய இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்துள்ள நிலையில், புனே போலீசார் இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளனர். மேலும், இந்த கொலைச் சதியில் இவர்களது கல்லூரி நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பாலி தீவிற்குச் செல்லவிருந்த பயணத்தின்போது கேதனின் பாஸ்போர்ட்டை சியா திருடி மறைத்தது, ஜூன் 14 அன்று இதே மலைப்பகுதியில் வைத்து பாம்பைக் காட்டி கேதனைத் தள்ளிவிட முயன்றது போன்ற பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில்,
தற்போது வைரலாகி வரும் "நடக்கப்போகாத திருமணம்" என்ற சியாவின் குறுஞ்செய்தி இந்த கொலை வழக்கின் மிக முக்கிய டிஜிட்டல் ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.