குழந்தை மீட்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியதும், ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த ஓர் ஆட்டோவில் இருந்த நபர்கள், சால்வை மற்றும் சிறிய மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையை சாலையோரம் தூக்கி வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். சாலையோரத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டகவே அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் தாமதிக்காமல் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையைப் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே, குழந்தையை வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குழந்தை மீட்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியதும், ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்தனர். மீட்கப்பட்ட அந்தப் பச்சிளம் குழந்தையைத் தாங்களே தத்தெடுத்து வளர்ப்பதாகக் கூறிப் பலரும் விருப்பம் தெரிவித்தனர். பொதுமக்களின் இந்த நெகிழ்ச்சியான கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள், குழந்தையை நேரடியாகத் தத்துக் கொடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தினர். குழந்தை தத்தெடுப்புச் சட்ட நடைமுறைகளின்படி, இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை அணுகுமாறு அங்கிருந்த மக்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.