இந்தியா

சொந்த மாவட்டத்திலேயே பின்னடைவு: ராஜஸ்தானில் பாஜகவின் நகர்ப்புற கோட்டை தகர்கிறதா?

ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவின் சொந்த மாவட்டமான பரத்பூரில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பதால், நகர்ப்புற கோட்டைகளில் பாஜகவின் பிடி தளர்ந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக வார்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடனான வாக்கு சதவீத இடைவெளி மிகக் குறைவாக இருப்பது மற்றும் பாஜகவின் பாரம்பரியமான நகர்ப்புற வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை கட்சி தலைமைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

தேர்தல் முடிவுகள்

மொத்தம் அறிவிக்கப்பட்ட 10,235 வார்டுகளில், பாஜக 4,179 வார்டுகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 3,613 வார்டுகளை கைப்பற்றி வலுவான போட்டியை அளித்துள்ளது. கடந்த தேர்தல் சுழற்சியுடன் ஒப்பிடுகையில் பாஜகவின் இடங்கள் 35.7 சதவீதத்தில் இருந்து 40.8 சதவீதமாக உயர்ந்துள்ள போதிலும், காங்கிரஸ் 35.3 சதவீத வாக்குகளை பெற்று மிக நெருக்கமாக பின்தொடர்கிறது.

இந்த தேர்தலின் மிகப்பெரிய பின்னடைவாக, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவின் சொந்த மாவட்டமான பரத்பூரில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. இங்குள்ள 65 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 36 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றனர். ஆளும்கட்சியான பாஜகவால் வெறும் 20 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது முதலமைச்சரின் சொந்த பகுதியிலேயே கட்சிக்கு உள்ள செல்வாக்கு சரிந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.

நகர்ப்புற வாக்கு வங்கியில் பிளவு

பாரம்பரியமாக பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் இந்த முறை அதிருப்தி நிலவுவது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்பதால், நகர்ப்புற கோட்டைகளில் பாஜகவின் பிடி தளர்ந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த வெற்றியைப் பாராட்டிய போதிலும், கள நிலவரம் பாஜகவிற்கு எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது. உட்கட்சிப் பூசல், உள்ளூர் வேட்பாளர்கள் மீதான அதிருப்தி மற்றும் சுயேச்சைகளின் ஆதிக்கம் ஆகியவை பாஜகவின் தொடர் வெற்றிகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன. வரவிருக்கும் தேர்தல்களில் இந்த தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால், பாஜக தனது கோட்டைகளை இழக்க நேரிடும் என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

SCROLL FOR NEXT