இந்தியா

ஜம்மு காஷ்மீர்: கீர் பவானி மேளா-அமர்நாத் யாத்திரையை ஒட்டி காந்தர்பலில் பலத்த பாதுகாப்பு!

காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் பிற மாநில பக்தர்கள் கலந்துகொள்வதால், இப்பகுதி முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் காந்தர்பல் மாவட்டத்தில் புகழ்பெற்ற "மாதா கீர் பவானி மேளா" மற்றும் வரவிருக்கும் "அமர்நாத் யாத்திரை" ஆகியவற்றை முன்னிட்டு, பக்தர்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் தரிசனம் செய்வதை உறுதி செய்ய ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் துல்முல்லா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கீர் பவானி அம்மன் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிரப் பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மேளாவில் ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் பிற மாநில பக்தர்கள் கலந்துகொள்வதால், இப்பகுதி முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், அமர்நாத் யாத்திரையின் முக்கிய பாதையான காந்தர்பல்-பால்தல் நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அவசர காலங்களில் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்படுவதை உறுதி செய்யவும், பல்வேறு பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் முக்கிய மூலோபாய இடங்களில் 'முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கை' பயிற்சிகள் தற்பொழுது நடைமுறையில் உள்ளன.

காஷ்மீர் மண்டல காவல்துறை தலைவர் வி.கே.பிர்தி துல்முல்லா கோவிலுக்கு நேரில் சென்று, கூட்ட நெரிசல் மேலாண்மை, வாகன நிறுத்துமிட வசதிகள் மற்றும் நுழைவுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விரிவாக ஆய்வு செய்து, அதிகாரிகளுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இன்று நடைபெற உள்ள மேளாவில், எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி இந்த ஆன்மீக விழாக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புப் படையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.