புதிய அரசு பதவியேற்புக்கு முன்னதாக, கேரள முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள வி.டி. சதீசன் 20 பேர் கொண்ட அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற விவரங்களை வெளியிட்டார். இந்த அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்த தலைவர்களும், இரண்டு பெண்கள் உட்பட 14 புதிய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இன்று பதவியேற்கவுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி (UDF) அமைச்சரவையில், ஐ.யு.எம்.எல் (IUML) உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
லோக் பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் அமைச்சர்கள் பட்டியலைச் சமர்ப்பித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சதீசன், கூட்டணிக்குள் சமூக மற்றும் பிராந்திய சமநிலையைக் கருத்தில் கொண்டு, கூட்டணித் தலைவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடல்களுக்கு பிறகே பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாகக் கூறினார்.
அறிவிக்கப்பட்ட அமைச்சர்களில், மூத்த காங்கிரஸ் தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான ரமேஷ் சென்னிதலா, கே. முரளிதரன், ஏ.பி. அனில் குமார் ஆகியோரும், கே.பி.சி.சி. தலைவர் சன்னி ஜோசப் ஆகியோரும் அடங்குவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சதீசனை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சென்னிதலா முதலமைச்சர் போட்டியில் இருந்தார்.
மூத்த ஐ.யு.எம்.எல். தலைவர் பி.கே. குன்ஹாலிகுட்டி, ஆர்.எஸ்.பி. தலைவர் ஷிபு பேபி ஜான், கேரள காங்கிரஸ் தலைவர் மான்ஸ் ஜோசப் மற்றும் கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) தலைவர் அனூப் ஜேக்கப் ஆகியோரும் அமைச்சர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவரும் முந்தைய UDF அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
அமைச்சரவையில் சி.பி. ஜான் மற்றும் ஐ.யு.எம்.எல். தலைவர்களான என். ஷம்சுதீன், கே.எம். ஷாஜி, பி.கே. பஷீர், வி.இ. அப்துல் கஃபூர் ஆகியோர் புதிய முகங்கள் ஆவர்.