இந்தியா

ஜெய்ப்பூர் எரிவாயு டேங்கர் லாரி விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்தது.உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

மாலை மலர்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை, சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட டேங்கர் லாரி, மற்றொரு லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. எரிவாயு கசிந்து டேங்கர் லாரி வெடித்து சிதறி தீப்பிடித்தது. அத்துடன், அந்த லாரிக்கு அருகில் சென்ற பல வாகனங்கள் தீப்பற்றி ஒன்றுடன் ஒன்று மோதின.

இந்நிலையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே, முதல் மந்திரி பஜன்லால் சர்மா, முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இது குறித்து முதல் மந்திரி சர்மாவிடம் விசாரித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.