இந்தியா

நாளை மறுதினம் சீஷெல்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி

சீஷெல்ஸ் அதிபர் கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 27 முதல் 29, 2026 வரை சீஷெல்ஸுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

சீஷெல்ஸ் தேசிய தினத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின்போது அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினியைச் சந்தித்துப் பேசுகிறார்.

சீசெல்ஸ் தலைநகர் விக்டோரியாவில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து, கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

பிரதமர் மோடி சீஷெல்சின் நாடாளுமன்ற கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். மேலும், சீஷெல்சில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்கிறார்.

சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி கடந்த பிப்ரவரி 2026-ல் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.