சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவர் முர்மு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சிறப்புரை ஆற்றினார்.
நாட்டின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், பொது தேர்வுகளை சீரமைக்கும் நடவடிக்கை, ஆபரேஷன் சிந்தூர், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு ஆற்றிய உரை ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கி இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுபகுறித்து பிரதமர் மோடி, வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஊக்கமளிப்பதுடன், ஆழ்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியதாக இருந்தது.
அவரது கருத்துகள் நம் நாட்டின் வலிமையையும், ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் வெளிக்காட்டுகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி உறுதியுடன் செயல்பட அவரது செய்திகள் ஊக்கமளிக்கின்றன" எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் 80-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, முதல் முறையாக 'வந்தே மாதரம்' தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.
மாநில தலைநகரங்களிலும், நாடு முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் ஊர்களிலும் விழா நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கொடியேற்றம் மற்றும் அதைத் தொடர்ந்த கலாச்சார நிகழ்ச்சிகள் அடங்கும். பிரதான நிகழ்ச்சி செங்கோட்டை வளாகத்தில் நடைபெறும், மேலும் பிரதமர் மோடி கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்.