பொய்களாலும் போலி குற்றச்சாட்டுகளாலும் நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மறைத்துவிட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடிதிட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் உள்நாட்டின் விமர்சனங்களுக்கு இடையே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.8 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களை வளர்ச்சி புள்ளிவிவரங்கள் தகர்த்தெறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது பிஷ்கெக் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "7.8 சதவீத வளர்ச்சி என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல; நாட்டின் உழைப்பிற்கும் ஒட்டுமொத்த மக்களின் உறுதிப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற பிரசாரத்தைக் குறிப்பிட்ட பிரதமர், "நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் சிலர் 'பொய் எதிரொலி'களை பரப்பி விரக்தியை விதைக் முற்படுகிறார்கள்" என சாடினார். பொய்களாலும் போலி குற்றச்சாட்டுகளாலும் நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மறைத்துவிட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
உலகளவில் உக்ரைன்-ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், சர்வதேச விநியோகச் சங்கிலி முடக்கம், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதாரப் பின்னடைவு ஆகிய பெரும் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. ரிசர்வ் வங்கி கணித்த 7 சதவீதத்தை விட ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் உறுதியான செயல்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் கனவுகளை நனவாக்க 'சுதேசி' கொள்கையைக் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த மக்கள் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான மோகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்தியர்கள் தங்களது குடும்பத் திருமண நிகழ்வுகளை வெளிநாடுகளில் நடத்தாமல், உள்நாட்டிலேயே நடத்தும் 'வெட் இன் இந்தியா' முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆடம்பர செலவுகளையும் தேவையற்ற இறக்குமதிகளையும் குறைத்து, உள்ளூர் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும் என்று பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.