இந்தியா

அரசு ஊழியருக்கு 4 ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு: இறுதியில் நீதி வழங்கிய நீதிமன்றம்

அரசு எந்தவொரு நபரிடமிருந்து உழைப்பை பெறுகிறதோ, அந்த நபருக்கு குறைந்தபட்ச ஊதியத்தையாவது வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி.

ஒடிசா மாநிலத்தில் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை வழக்கு காரணமாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநில அரசு ஊழியர் ஒருவருக்கு ஆதரவாக ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் அடுத்த மானேஷ்வர் பகுதியை சேர்ந்த பைன்சா என்பவர், கடந்த நவம்பர் 2022-ஆம் ஆண்டு முதல் தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தனது சம்பளத்தை விடுவிக்க கோரியும் ஒடிசா உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த வழக்கு ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா எஸ்.தீட்சித் மற்றும் சித்தரஞ்சன் தாஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “சட்டப்பிரிவு 21-வது பிரிவின் கீழ், வாழ்வதற்கான உரிமை எந்த ஒரு நபருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அது அடிப்படை மனித மாண்புடன் வாழ்வதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. ஒடிசா மாநில அரசு இந்த விலைமதிப்பற்ற உரிமைகளை மறுக்க முடியாது” என்று கூறினர்.

மேலும் ”எப்போதெல்லாம் அரசு ஒரு நபரிடமிருந்து உழைப்பையோ அல்லது சேவையையோ பெறுகிறதோ, அப்போது அத்தகைய நபருக்கு குறைந்தபட்ச ஊதியத்தையாவது வழங்க வேண்டும். இல்லையெனில் அது அரசியலமைப்பின் 23-வது பிரிவை மீறிய குற்றமாகும்.

கடந்த காலங்களில் நடந்த குஜராத் உயர் நீதிமன்ற வழக்கில், சிறையில் இருக்கும் ஒரு கைதி சிறை வளாகத்திற்குள் வேலை செய்ய வைக்கப்பட்டால், அவர் தனது உழைப்பிற்கு நியாயமான மற்றும் நேர்மையான ஊதியத்தை பெற அரசியலமைப்பு சட்டத்தின்படி அவருக்கு உரிமை உள்ளது.

அதேபோன்று ஒரு ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரசுப் பணியில் பணியாற்றிய ஒரு ஊழியருக்கு செலுத்த வேண்டிய ஊதியத்தை மறுக்க முடியாது.

அதுதான் நமது அரசியலைப்பின் 23-வது பிரிவின் அடிப்படை கொள்கை. எனவே, தனி நீதிபதியின் வாதத்தில் விவாதிக்கக்கூடிய குறைபாடுகள் இருந்தாலும், இந்த நீதிமன்றம் தலையிடுவதற்கு அது தகுதியற்றது.

மேலும் மாண்புமிகு தனி நீதிபதியின் உத்தரவு அதிகபட்சமாக எட்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஒடிசா மாநில அரசு, நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.