இந்தியா

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: டெல்லியில் காலரவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய சோனம் வாங்சுக்

விவசாய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெரும்பாலும் இளைஞர்களை உள்ளடக்கியது கரப்பான்பூச்சி கட்சி. இவர்களுக்கு லடாக் மாநில அந்தஸ்துக்காக போராடி வரும் விஞ்ஞானி சோனம் வாங்சுக் தொடக்கத்தில் இருந்தே ஆதரவு நல்கி வருகிறார்.

இக்கட்சியின் முதல் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்றபோது இவர் கலந்துகொண்டார்.

இந்நிலையில் ஜூன் 20 முதல் நடந்து வரும் காலவரையற்ற போராட்டத்தில் சரியாக 8வது நாளான இன்று சோனம் வாங்சுக் இணைந்துகொண்டார்.

அவர் தனியே காவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தையும் இன்று தொடங்கி உள்ளார்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெரும்பாலும் மாணவர்கள் அவர் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கியபோது அங்கு கூடி ஆரவாரித்தனர்.

பல விவசாய தலைவர்களும் அங்கிருந்தனர். முன்னதாக கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அப்ஜித் தீப்கே மற்றும் சோனம் வாங்சுக் இருவரும் மகாத்மா காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர்.

போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி விவசாய அமைப்புகளுக்கு தீப்கே முன்னர் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று போராட்டத்திற்கு வரவிருந்த உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் விவசாய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குற்றம்சாட்டினார்.