இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சலுக்கு ஆளான மேலும் ஒரு மாணவி
தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூர் கிராமத்தை அங்கிதா சாங்லே என்ற அந்த மாணவி நேற்று முன் தினம் மாலை சுமார் 4.30 மணியளவில் தனது அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் அங்கிதா 166 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற மன அழுத்தத்தில் அவர் இருந்து வந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து மாணவியின் தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதில் அவர் எழுதியிருப்பதாவது,
"நீங்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தீர்கள், ஆனால் உங்களின் ஒரு ஆசையைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை.
அம்மா, ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு தோழியைப் போல எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். அண்ணா, நீங்களும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தீர்கள். அம்மா, அப்பாவை விட நீங்கள் என் மீது அதிக அன்பு காட்டினீர்கள். என் தற்கொலைக்கு நீங்கள் யாரும் பொறுப்பல்ல.
நான் நீட் தேர்வுக்குப் படித்தபோதும் கூட எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தீர்கள். ஆனால் நான் தோற்றுவிட்டேன்; உங்கள் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
அண்ணா, அம்மா மற்றும் அப்பாவை தயவுசெய்து நன்றாகப் பார்த்துக்கொள். அவர்களுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக்கொள்." என எழுதியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே 3 நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டு இந்த மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே ஏற்பட்ட மன அழுத்தத்தில் நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தேர்வு முறைகேடுகளை தடுக்கத் தவறிய நிர்வாக தோல்விக்கு பொறுப்பேற்குமாறு டெல்லியில் சிஜேபி தலைமையில் இளைஞர்களின் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார்.
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019