மாணவி மாயமாகி பல மாதங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த 18 வயதான இரண்டாம் ஆண்டு பியூசி மாணவி ஒருவர், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவருடன் அவரது தோழியான மற்றொரு சிறுமியும் மர்மமான முறையில் மாயமானார். இருவரின் குடும்பத்தினரும் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாயமான இரு மாணவிகளும் தங்களின் மொபைல் போன்கள் மற்றும் உடைமைகளை வீட்டில் விட்டுச் சென்றது தெரியவந்தது. அவர்கள் தங்களின் கல்லூரி பைகள் மற்றும் ஆதார் அட்டைகளை மட்டுமே கையோடு எடுத்துச் சென்றிருந்தனர். பெங்களூரிலிருந்து புறப்பட்ட இருவரும் முதலில் மலை மகதேஸ்வரா மலைப்பகுதிக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து தனித்தனியாகப் பிரிந்து சென்றுள்ளனர்.
மாணவி மாயமாகி பல மாதங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை உடனடியாக மாநில குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஏப்ரல் மாதம் முதல் சிஐடி சிறப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த 7 மாதங்களாக எவ்வித தடயமும் இல்லாமல் இருந்த வழக்கில், இந்த வாரம் ஒரு முக்கிய டிஜிட்டல் திருப்பம் ஏற்பட்டது. அந்த 18 வயது மாணவி, ஏதோ ஒரு சேவைக்காகத் தனது ஆதார் எண்களைப் பயன்படுத்தி, அதற்குரிய ஒருமுறை கடவுச்சொல்லைப் பெறத் தனது கணவரின் மொபைல் எண்ணைப் பதிவு செய்துள்ளார். இந்த ஆதார் டிஜிட்டல் தடத்தைக் கண்டறிந்த சிஐடி புலனாய்வுக் குழுவினர், உடனடியாக அந்த மொபைல் எண்ணைக் கண்காணித்தனர்.
குறிப்பிட்ட மொபைல் எண்ணின் உரிமையாளரைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கனகபுரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அந்த மாணவி அவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கு வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மீட்கப்பட்ட மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக மூத்த சிஐடி அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியைப் பத்திரமாக மீட்ட சிஐடி போலீசார், அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெற்றோர் வசம் ஒப்படைத்தனர். அதே வேளையில், அவருடன் மாயமான மற்றொரு சிறுமியைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.