இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

வெடிவிபத்தின் அதிர்வால் ஆலையை சுற்றியிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகின.

உத்தரப்பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தின் பிப்ரி காவல் எல்லைக்குட்பட்ட மனோரி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு ஆலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிர சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருடன், அருகிலுள்ள மனோரி விமானப்படை தளத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. விபத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ரெயில் போக்குவரத்து பாதிப்பு

வெடிவிபத்தின் அதிர்வால் ஆலையை சுற்றியிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகின. அருகிலுள்ள டெல்லி-ஹவுரா ரெயில் பாதையில் பாதுகாப்பு கருதி ரெயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு, வந்தே பாரத் மற்றும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. உயர் அழுத்த மின் கம்பிகள் சேதமடைந்ததால் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.