இந்தியா

ராமர் கோயில் நன்கொடை திருட்டு வழக்கில் ஆஜரானால் ரூ.5 லட்சம் அபராதம் - வழக்கறிஞர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

கோயில் அறக்கட்டளைத் தலைவர் சம்பத் ராய், அறங்காவலர்கள் கோபால் ராவ் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோரின் துணை இல்லாமல் இந்த திருட்டு நடந்திருக்காது.

உத்தரப் பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்ட வழக்கறிஞர் சங்கம், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராக மாட்டோம் என அறிவித்துள்ளது.

இன்று அச்சங்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்காக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த முடிவை மீறி ஆஜராகுபவர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சம்பத் ராய், கோபால் ராவ் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோரின் துணை இல்லாமல் இந்த திருட்டு நடந்திருக்காது எனவும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் காலிகா பிரசாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் சுமார் ரூ.7.5 கோடி வரை கையாடல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், கோயில் ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

குற்றத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று கோயிலின் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் , அறங்காவலர் அனில் மிஸ்ரா போன்றோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவையும் நியமித்துள்ளது.

இதனிடையே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என பலரும் கோரிவருகின்றனர்.

2005-ல் அயோத்தி பயங்கரவாதத் தாக்குதல் வழக்கிலும் குற்றவாளிகளுக்காக வாதாடக் கூடாது என இதே ஃபைசாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் போட்டதும் குறிப்பிடத்தக்கது.