இந்தியா

கொல்கத்தா கிடங்கு விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் FIR பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் தாராதலா பகுதியில் கட்டப்பட்டு வந்த மூன்று அடுக்கு கிடங்கு ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் காயமடைந்தனர்.

இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 29 பேரில், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் FIR பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளனர். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் தடுக்க, கட்டிட வரைபடங்களை தணிக்கை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மற்றும் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.