கர்நாடக மாநிலம் கடக் நகரில் உள்ள கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் ஒருவர் தனது குழந்தையை லக்கேஜ் பைக்குள் போட்டு அந்த பையை மோட்டார்சைக்கிள் பக்கவாட்டில் தொங்கவிட்டபடி ஓட்டிக்கொண்டு சென்றார். குழந்தையின் கழுத்து பைக்குள் இருந்த நிலையில் மேற்புறத்தில் தலை மட்டுமே வெளியே தெரிந்தது. இந்த கட்டை பை எடை தாங்காது. எளிதாக அறுந்து விழுந்துவிடும். அப்படிபட்ட பையில் குழந்தையின் உயிரை பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் பைக்குள் போட்டு ஓட்டினார். திப்பு சர்க்கிளிலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் குழந்தை மிகவும் அபாயகரமாக கொண்டு செல்லப்படுவதை கண்டு அவ்வழியே சென்றவர்கள் ஆபத்து குறித்து எச்சரித்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் தனது பயணத்தை தந்தை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டினார். அந்த குழந்தை பையில் இருந்து தவறி சாலையில் விழுந்தால் என்ன ஆவது? என நினைத்து பொதுமக்கள் அச்சப்பட்டனர். இந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தந்தையின் இந்த பொறுப்பற்ற செயலை பொதுமக்கள் தங்கள் செல்போன் கேமராக்களில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். பதைபதைக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவும், புகைப்படங்களும் வைரலானதை அடுத்து தந்தையின் பொறுப்பற்ற செயலை கண்டித்து சமூக வலைதளங்களில் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வீடியோ வைரலானதை தொடந்து போலீசார் வண்டி எண்ணை வைத்து அவரை தேடி வருகின்றனர்.