எப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (எப்சிஆர்ஏ)வுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம் எப்சிஆர்ஏ மசோதாவை கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர எத்தனித்தது.
ஆனால் ஆகஸ்ட் 12 அன்று மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் விவாதங்களுக்குப் பிறகு மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் எப்சிஆர்ஏ மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பிக்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.
இந்த கூட்டுக்குழுவில் பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமை வகிப்பார்.
இதில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை சேரந்த 5 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவின் 2 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
சமாஜ்வாதி, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலா 1 எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.
2014 முதல் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. அவ்வாறான மசோதாக்களை ஆய்வு செய்ய அமைக்கப்படும் 19வது நாடாளுமன்ற கூட்டுக் குழு இது. 2024இல் இருந்து 9வது கூட்டுக்குழு இது.
கடந்த 1976 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் எப்சிஆர்ஏ சட்டம் கொண்டு வரப்பட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்த சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டன.
கடந்த 2020 ஆம் ஆண்டில் பிரதமர் திர மோடி தலைமையிலான என்டிஏ அரசின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் எப்சிஆர்ஏவில் மேலும் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டன.
தற்போது மேலும் அதில் மேலும் 3 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகளின் சொத்துக்களை நிர்வகிக்கவும், தேவைப்பட்டால் அவற்றை விற்கவும் ஒரு தனி அதிகாரியை அரசு நியமிப்பது,
உரிமம் ரத்து செய்யப்பட்ட அமைப்புகள் தங்களின் வெளிநாட்டு நிதி மற்றும் அசையும், அசையா சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதிகளைப் பூர்த்தி செய்யாத அமைப்புகளின் சொத்துக்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுப்பது ஆகியவை புதிய திருத்தங்கள் ஆகும்.
இது குறித்து புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுக்குழு செய்து தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது. இதன் பின் மசோதா அடுத்த கூட்டத்தொடரில் மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.