இந்தியா

ஜார்க்கண்ட்: போராடும் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து பாஜக பந்த்-க்கு அழைப்பு

போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர்.

மாநிலத்தில் பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் "காவல்துறையின் அத்துமீறல்களை" கண்டித்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஜார்க்கண்ட் பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை இந்த பந்த் அமலில் இருக்கும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் ஆதித்யா சாஹு தெரிவித்தார்.

"இது மாநிலம் தழுவிய பந்த் ஆகும். இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் இந்த அடைப்பு நடவடிக்கையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன," என்று பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சாஹு கூறினார்.

கடும் தாக்குதல்:

சட்டமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றபோது அவர்கள் குற்றவாளிகளை போல நடத்தப்பட்டதாக பாஜக தலைவர் குற்றம் சாட்டினார்.

"காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர், நீர்ப்பீச்சிகளை பயன்படுத்தினர் மற்றும் தடியடி நடத்தினர். மாலை வேளையிலும் கூட போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது ஒரு சர்வாதிகார அரசு," என்று சாஹு கூறினார்.

மாணவர்களை ஏமாற்றியதாக ஜே.எம்.எம். (JMM) தலைமையிலான கூட்டணி அரசை அவர் குற்றம் சாட்டியதுடன், "மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை" நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மோதல்:

பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போராடிய வேலை தேடுபவர்கள் மீது காவல்துறையினர் நீர்ப்பீச்சிகள், கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை பயன்படுத்தியதால், நேற்று (திங்கள் கிழமை) ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு அருகே ஏற்பட்ட மோதலில் பல போராட்டக்காரர்களும் நான்கு காவலர்களும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பல தடுப்புகளை போராட்டக்காரர்கள் மீறியதை தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டது.

காவல்துறையின் நடவடிக்கையில் பெண்கள் உட்பட பலர் காயமடைந்ததாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டிய நிலையில், போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் நான்கு காவலர்கள் காயமடைந்ததாக ராஞ்சி நகர காவல் கண்காணிப்பாளர் (SP) பரஸ் ரானா தெரிவித்தார்.

ஜே.எஸ்.எஸ்.சி. (JSSC) அல்லது ஜே.பி.எஸ்.சி. (JPSC) என எந்த அமைப்பாக இருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக வேலைகளை விற்பனை செய்வதிலேயே அவை ஈடுபட்டுள்ளன என்றும், அதே வேளையில் மாணவர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி குற்றம் சாட்டினார்.