இந்தியா

Arrest | பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜம்மு காஷ்மீர் ஆசிரியர் கைது!

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கிஷ்வார் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், சத்ரூ பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர்களுக்கு தேவையான தளவாடங்களை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்ரூ, பெய்க்போரா சிங்போராவை சேர்ந்த மஷ்கூர் அகமது என்ற மஷ்கூர் மாஸ்டர் என அறியப்படும் இவர், இந்தர்வால் மண்டலத்தில் உள்ள குஜ்ராரி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவர் 2004-ஆம் ஆண்டில் ரெஹ்பர்-இ-தாலீம் ஆசிரியராக நியமிக்கப்பட்டு, 2009-ஆம் ஆண்டில் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து கிஷ்வார் காவல் நிலைய தலைவர், எஸ்.எஸ்.பி. நரேஷ் சிங், விசாரணை மற்றும் துல்லியமான நடவடிக்கைகளின் மூலம் பள்ளி ஆசிரியரை காவல்துறை கைது செய்ததாக தெரிவித்தார்.

UAPA-வின் 13, 16, 18 மற்றும் 20 ஆகிய பிரிவுகள், BNS-ன் 61(2), 109, 147 மற்றும் 148 ஆகிய பிரிவுகள், மற்றும் ஆயுதச் சட்டத்தின் 7/27 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.