மும்பையை தலைமையிடமாக கொண்ட ஒன் வேர்ல்ட் சோர்சிங் என்ற தனியார் நிறுவனம், உலகளாவிய மூலப்பொருட்கள் கொள்முதல், சில்லறை விநியோகம் மற்றும் ஏற்றுமதி தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தனியார் நிறுவனத்தில் ஆஷிமா மனோஜ் குஷலானி மற்றும் ராகேஷ் குமார் சிங் ஆகியோர் வணிகத்தை நடத்தும் முதன்மை பங்குதாரர்களாகவும் , கூட்டாளிகளாகவும் இருந்து வருகின்றனர்.
தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்கள், வங்கிகளுக்கு மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் பிற தவறான நிதி தகவல்களைச் சமர்ப்பித்து, அதன் மூலம் இந்தியன் வங்கி மற்றும் மற்ற வங்கியிடமிருந்து அதிக ரொக்கக் கடன்களைப் பெற்றுள்ளனர்.
இதன்மூலம் இந்தியன் வங்கிக்கு சுமார் ரூ.62.42 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக, தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எதிராக மும்பையில் உள்ள இந்தியன் வங்கியின் எஸ்.ஏ.எம் கிளை புகார் அளித்தது.
இதையடுத்து மும்பை மற்றும் பிற இடங்களில் உள்ள அந்த நிறுவனத்தின் கூட்டாளிகளுடன் தொடர்புடைய பல வளாகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளின் போது, விசாரணைக்குத் தொடர்புடைய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும் இந்த முதற்கட்ட ஆய்வில், கடன் வாங்கிய நிறுவனங்கள் தங்களின் கணக்குகளை மிகைப்படுத்திக் காட்டியதாகக் கூறப்படும் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.