அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவதும் நீதிமன்றத்தில் அரசு சார்பாக வாதிடுவதும் சொலிசிட்டர் ஜெனரல் உடைய கடமைகளாகும். நாட்டின் 2வது உயரிய சட்ட அதிகாரியாக சொலிசிட்டர் ஜெனரல் கருதப்படுகிறார்.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவை நியமனக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
மறுநியமனம் செய்யப்பட்டுள்ள துஷார் மேத்தாவின் புதிய பதவிக்காலம் 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
அடுத்த மூன்று ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இப்பதவியில் நீடிப்பார்.
இந்த நியமனத்தின் மூலம் துஷார் மேத்தா தனது பதவிக்காலத்தின் முடியும்போது சொலிசிட்டர் ஜெனரலாக மொத்தம் 11 ஆண்டுகளைப் பூர்த்தி செய்வார்.
கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று சொலிசிட்டர் ஜெனரலாகப் பொறுப்பேற்ற துஷார் மேத்தா, ஏற்கனவே இப்பதவியில் சுமார் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதன் மூலம் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியவர்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார்.
துஷார் மேத்தாவுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக ஆஜராகும் ஐந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களுக்கும் தலா மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர்களான சூர்யபிரகாஷ் வி. ராஜு, என். வெங்கடராமன், ஐஸ்வர்யா பாதி, விக்ரம்ஜித் பானர்ஜி மற்றும் கே.எம். நடராஜ் ஆகியோர் இதில் அடங்குவர்.