இந்தியா

அமெரிக்க பொருளாதார தடையை மீறி ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி: இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம்

அமெரிக்க தடைக்கு மத்தியில் ஈரானுக்கு இந்தியா அரிசி ஏற்றுமதி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறி, ஈரானுக்கு வழக்கம்போல அரிசி ஏற்றுமதி செய்யப்படும் என அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருந்து வரும் நிலையில், ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம், அமெரிக்கா விதிக்க இருக்கும் பொருளாதார தடையை, இந்தியா தாங்கிக் கொள்ளும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி

இந்தியா, ஈரானுக்கான விற்பனையானது கடுமையான அமெரிக்க தடைகளின் அச்சுறுத்தலை தாங்கும் என்றும், விலை உயர்வு மற்றும் பல மாதங்களாக நடந்து வரும் போர்க்கால இடையூறுகள் இருந்தபோதிலும், ஏற்றுமதி சீராக நடைபெற்று வருவதாக அஜய் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் அரிசியே முதன்மையானதாக உள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஈரானுக்கான இந்தியாவின் 1.25 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அரிசியாக உள்ளதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.

பதிலுக்கு, இந்தியாவின் 11.5 பில்லியன் டாலர் உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் சுமார் 7 சதவீதத்தை ஈரான் வாங்கியுள்ளது.

அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம்

இந்த நிலையில் அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் பலோதியா கூறுகையில், “விலை உயர்வு மற்றும் பல மாதங்களாக நீடித்த போரினால் ஏற்பட்ட வர்த்தக இடையூறுகள் ஒருபுறம் இருந்தபோதிலும், ஈரான் உணவு பாதுகாப்பு காரணங்களுக்காக கொள்முதல் செய்து வருவதால், அந்நாட்டின் தேவை சீராக உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் திங்களன்று 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராகத் தடைகளை அறிவித்து, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அச்சுறுத்திய போதிலும், ஈரானுடனான வர்த்தகம் தடையின்றி தொடருகிறது.

மனிதாபிமான விதிவிலக்கின் கீழ் வரும் இந்த பிரதான உணவின் அத்தியாவசிய தன்மையும், மாற்று விநியோகஸ்தர்கள் குறைவாக இருப்பதும் வர்த்தகத்தைத் தக்கவைக்க உதவும்.

கடந்த கால ஏற்றுமதி

கடந்த நிதியாண்டில் ஈரான் 10 லட்சம் டன்களுக்கும் அதிகமான அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது, இது ஓராண்டுக்கு முந்தைய ஏற்றுமதியை விட 17% அதிகம் என அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.

சமீப காலத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியையும் பணப் பரிமாற்றங்களையும் தடையின்றித் தொடர்ந்ததை இந்த உயர்வு பிரதிபலிக்கிறது; இது இரு தரப்பினருக்கும் வர்த்தகத்தை பேணுவதற்கான ஒரு ஊக்கத்தை அளிக்கிறது.

ஈரானிய வங்கிகளுடன் நேரடியாகப் பரிவர்த்தனை செய்வதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, சீனா மற்றும் சமீபத்தில் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள நிதி வழிமுறைகள் மூலம் ஈரானுடனான வர்த்தகத்திற்கான கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கான வழிகளை இந்திய வர்த்தகர்கள் கண்டறிந்துள்ளனர்.

அந்த வழிமுறைகள் இதுவரை எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஈரானுக்கான மற்ற முக்கிய இந்திய ஏற்றுமதிகளில் மருந்துகள், தேயிலை, வாழைப்பழங்கள், தானியங்கள், மாட்டு இறைச்சி மற்றும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கும்.

மனிதாபிமான விதிவிலக்கு மற்றும் குறைந்த மாற்று வழிகளைக் காரணம் காட்டி, இவற்றின் ஏற்றுமதிக்கும் தடை ஏற்பட வாய்ப்பில்லை.

இதற்கிடையில், அமெரிக்காவின் விலக்குகளால் இந்த ஆண்டு ஏற்பட்ட ஒரு குறுகிய கால வாய்ப்பை தவிர, இந்தியா 2019 முதல் ஈரானிலிருந்து எந்த கச்சா எண்ணெயையும் இறக்குமதி செய்யவில்லை” என்று அவர் கூறினார்.

ஈரான் மீதான அமெரிக்க தடைகளுக்கு முன்பு, இந்தியா அந்நாட்டுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்தது, மேலும் தெஹ்ரான் அதன் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தர்களில் ஒன்றாக இருந்தது.

இந்தியா ஏற்றுமதி கூட்டமைப்பு தலைவர்

ஈரானுக்கான இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடாது என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி. ரல்ஹான் கூறினார்.

ஈரானுக்கான ஏற்றுமதிகள் கணிசமான அளவில் இல்லை என்றாலும், ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்கான சில ஏற்பாடுகளுடன், மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.