இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இது இரு நாடுகளுக்கிடையே, பரஸ்பர உறவுகளை மேம்படுத்தும் மிக முக்கியமான இருதரப்பு அரசுமுறை சந்திப்பாகும்.
இது இரு நாடுகளுக்கிடையே நடக்கும் 16வது ஆண்டிற்கான உச்சி மாநாடாகும். கடந்த 15-வது உச்சி மாநாடு 2025 ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடைபெற்றது. அதில் பங்குகொள்ள பிரதமர் மோடி டோக்கியோவிற்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த ஆண்டிற்கான உச்சி மாநாடு, ஜூலை மாதம் 1 முதல் 3ஆம் தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி, இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்வார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் டகாயிச்சியின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.
இதுகுறித்து ஜப்பான் வெளியுறவத்துறை தூதர் ஓனோ கெய்ச்சி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது,
பிரதமர் சானே டகாயிச்சி, ஜூலை 1 ஆம் தேதி புது தில்லிக்கு வருகிறார். பிரதமராக தனது முதல் இந்தியப் பயணத்தின் போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு உச்சிமாநாட்டு கூட்டத்தை நடத்துவார்.
மேலும், இரு தலைவர்களும் வர்த்தகத் தலைவர்களுடன் ஒரு பெரிய பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம் இந்தியா-ஜப்பான் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.