இந்தியா

முற்றிலும் மாறுபட்ட உலகத்தைக் கண்டேன்: இந்தியாவின் கல்வி மற்றும் பண்பாட்டைப் பாராட்டிய ஜிம்பாப்வே இளைஞர்!

கல்வியைத் தவிர இந்தியாவின் மருத்துவத் துறை மற்றும் உணவு முறையையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மேற்கத்திய நாடுகளைத் தாண்டி தரமான கல்வியும், வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளும் இந்தியாவில் நிறைந்துள்ளன என்பதைத் தனது அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாகக் கூறுகிறார் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த கலும்பா முவாலே.

வாய்ப்புகளை கண்டு வியப்பு

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையே முதன்மையாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இந்தியாவுக்கு உயர்கல்விக்காக வந்த கலும்பா முவாலே, இங்குள்ள வாய்ப்புகளைக் கண்டு வியப்படைந்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜிம்பாப்வேவில் பல்கலைக்கழகங்களில் சேருவது மிகவும் கடினமானது மற்றும் கடுமையான போட்டி நிறைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு கட்டண அமைப்புகளில், எண்ணற்ற பாடப் பிரிவுகளுடன் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் செயல்பட்டு வருவதை அவர் பாராட்டியுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் பயின்று வருவதைக் கண்டு தான் ஆச்சரியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவம்

கல்வியைத் தவிர இந்தியாவின் மருத்துவத் துறை மற்றும் உணவு முறையையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஜிம்பாப்வே நாட்டில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெறுவது கடினம் மற்றும் அதிக செலவு பிடிக்கக்கூடியது என்றும், ஆனால் இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை மிக எளிதாகக் கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

உணவு முறையைப் பொறுத்தவரை, ஜிம்பாப்வேயில் சாட்சா, அரிசி சாதம் மற்றும் காரத்திற்காக மிளகாய் மட்டுமே சேர்க்கப்பட்ட உணவுகள் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் தினமும் ஒரு புதிய சுவையை அனுபவிக்க முடியும் என்றும், சுவைகளின் பிரம்மாண்ட உலகமே இந்தியாவில் உணவில் நிறைந்துள்ளது என்றும் அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

இணையவாசிகளின் வரவேற்பு

கலும்பா முவாலே பகிர்ந்துள்ள இந்த வீடியோ 53 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ள பல இந்திய இணையவாசிகள், அவருக்கு நெகிழ்ச்சியான வரவேற்பை அளித்து வருகின்றனர். "அன்பும் பரபரப்பும் நிறைந்த இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம், உங்கள் இந்திய வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள் என்று நம்புகிறோம்" எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.