திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அலிபிரி சோதனை சாவடியில் இருந்து கோவில் முகத்து வாரம், மற்றும் கோவில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டன் கணக்கில் மலர்கள் கொண்டுவரப்பட்டு கோவில் உள்பிரகாரம், வெளி பிரகாரம் முழுவதும் மலர் அலங்காரம் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை முன்னிட்டு ஏழுமலையானின் படைத் தளபதி விஸ்வக்சேனர் நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் வைபவம் நடந்தது.
விழாவின் ஒரு பகுதியாக பூமி தாய்க்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்குரார்பனம் எனும் மண்ணில் விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று மாலை 6.21 மணி முதல் 6.35 மணிக்குள் மீனலக்கனத்தில் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
அதன் பின்னர் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் ஆகியோருடன் மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி சார்பில் வழங்கப்பட்ட 15 மின்சார பஸ்கள் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இரவு ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.