சீஷெல்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு, ‘நீல எல்லையின் பாதுகாவலர்’ (Guardian of the Blue Horizon) என்ற அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் பேட்ரிக் ஹெர்மினி.
இது பிரதமர் மோடி பெறும் 34வது வெளிநாட்டு விருதாகும். கிழக்கு ஆப்பிரிக்கத் தீவு நாடான சீசெல்ஸ் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் நாடுகளுக்கு இந்த விருதை வழங்குகிறது.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, இதனைப் பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொண்டு போராடும் அனைத்து நாடுகளுக்கும், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் சமர்ப்பிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீஷெல்ஸ் நாட்டின் தேசியத் தின பொன்விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக மூன்றுநாள் அரசுப் பயணம் மேற்கொண்டுள்ளார் மோடி.
இந்தப் பயணத்தின்போது இந்தியாவால் தயாரிக்கப்பட்ட அதிவேக ரோந்து கப்பல் ஒன்றையும் சீஷெல்ஸ் கடலோர காவல்படைக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி.