லக்னோ:
காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வாரணாசியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கான கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
கடந்த மே 19-ம் தேதி விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் பிரபல தாதா முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
நில அபகரிப்பு, மிரட்டல் மற்றும் கொலை உள்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா முக்தார் அன்சாரி, கடந்த 2005-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளரான சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா லக்னோ கோர்ட் வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கறிஞர்கள் போல் வேடமணிந்து வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்படும் ஜீவா, பா.ஜ.க. தலைவர் பிரம்மதத்தா திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். ஜீவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.