இந்தூர்  
இந்தியா

சார்ஜ் ஏறும்போது வெடித்துச் சிதறிய மின்சார கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி | Indore

அதிநவீன மின்னணு பூட்டு அமைப்பு செயலிழந்தது. கதவுகளைத் திறக்காமல் அவர்களால் வெளியேற முடியவில்லை.

மாலை மலர்

மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் மின்சார வாகனம் வெடித்த தீ விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இன்று அதிகாலை 3:30 அளவில், இந்தூரின் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் பகுதியில் உள்ள மூன்று மாடிக் குடியிருப்பு கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார கார் சார்ஜ் செய்யப்பட்டபோது வெடித்துச் சிதறியது.

இதில் தீ கட்டிடத்திற்கு பரவிய நிலையில் வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 எரிவாயு சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்ததால், தீயின் தீவிரம் எதிர்பாராத அளவிற்கு அதிகரித்தது.

முந்தைய நாள் இரவு வீட்டில் ஒரு நிகழ்விக்கிறாக இந்த சிலிண்டர்கள் சேமிக்கப்பட்டதாக தெரிகிறது.

வீட்டின் உரிமையாளரான மனோஜ் புகாலியா தனது குடும்பத்தினருடன் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் தீ பரவியதை கண்டு அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முயன்றனர்.

தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கட்டிடத்தில் நிறுவப்பட்டிருந்த அதிநவீன மின்னணு பூட்டு அமைப்பு செயலிழந்தது.

கதவுகளைத் திறக்காமல் அவர்களால் வெளியேற முடியவில்லை. எனவே அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டு, புகையை சுவாசித்ததால் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

விபத்தில் மனோஜ் (65), தான்மே(6), ராசி (12), சிம்ரன் (30), டீனு (35), சுமன் (60), விஜய்(65), சோட்டு (22) ஆகியோர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அனைத்து உடல்களை மீட்டனர் .

மனோஜ் புகாலியா ஒரு பாலிமர் வியாபாரி என்றும், அவர் வீட்டில் பாலிமர் பொருட்களை சேமித்து வைத்திருந்ததே தீ வேகமாகப் பரவக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, குடியிருப்புப் பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்வது குறித்து நிபுணர் குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு, புதிய வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும் என்று கூறினார்.