ஆந்திராவில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தேவஸ்தான அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் சாதாரண பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் நடந்து வருகிறது. வருகிற 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது.
இதன் காரணமாக பக்தர்கள் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுந்தம் வளாகங்கள் வெறிச்சோடி உள்ளன. பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளதால் 6 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விரைந்து தரிசனம் செய்வதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 69,049 பேர் தரிசனம் செய்தனர். 23,842 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.