தெலுங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டம் நவாபு பேட்டையை சேர்ந்தவர் சிரிஷா. இவர் டிப்ளமோ பார்மசி படித்து வருகிறார். இவருக்கு தாய் இல்லாததால் அவரது தந்தை படிப்பு முடிவதற்கு முன்பே தொழிலதிபரான சாய் குமார் என்பவரை திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்திற்கு பிறகு சாய்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நிதி நெருக்கடிக்கு ஆளானார். நிதி நெருக்கடியை சமாளிக்க தம்பதியினர் திட்டம் தீட்டினர்.
மனைவியின் டிப்ளமோ பார்மசி மற்றும் மருத்துவ அறிவை பயன்படுத்தி நோயாளிகளுக்கு போதை ஊசி செலுத்தி நகை பறிக்க திட்டம் போட்டனர். அதன்படி சாய்குமார் ஆஸ்பத்திரிக்கு வெளியே காத்திருப்பார்.
சிரிஷா டாக்டர் வேடத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள வார்டுகளுக்கு செல்வார். வார்டுகளில் நகை அணிந்து இருக்கும் பெண் நோயாளிகளை குறி வைத்து போதை ஊசி செலுத்துவார்.
நோயாளி மயங்கிய பிறகு அவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வெளியே காத்திருக்கும் கணவருடன் வாகனத்தில் தப்பிச்சென்று விடுவார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்று கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தனர்.
ஆஸ்பத்திரிகளில் தொடர் நகை திருட்டு நடப்பது குறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் சிரிஷா தனது கணவருடன் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் சிரிஷா மற்றும் அவரது கணவர் சாய்குமார் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.