இந்தியா

திருப்பதியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க செயினை விட்டு சென்ற சென்னை பக்தர்| Tirupati Temple

தேவஸ்தான ஊழியர்கள் அன்பு தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்றனர்.

மாலை மலர்

சென்னையை சேர்ந்த அன்பு என்பவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார்.

திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான அறையில் தங்கினார். குளியலறையில் குளிக்க சென்ற போது தனது கழுத்தில் இருந்த தங்கச் செயினை எடுத்து கொக்கியில் மாட்டி குளித்தார்.

பின்னர் தங்கச் செயினை மறந்து விட்டு சென்னைக்கு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது கழுத்தில் செயின் இல்லாததை கண்டு திடுக்கிட்டார். அப்போதுதான் குளியல் அறையில் தங்கச் சங்கலியை மாட்டியது நினைவுக்கு வந்தது.

அதற்குள் தேவஸ்தான ஊழியர்கள் அன்பு தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்றனர். அப்போது அங்குள்ள குளியல் அறையில் இருந்த தங்க செயினை மீட்டு தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அதிகாரிகள் பதிவேட்டில் எழுதப்பட்டு இருந்த செல்போன் எண்ணை வைத்து அன்புக்கு தகவல் தெரிவித்தனர். அன்பு திருப்பதி தேவஸ்தான அலுவலகத்திற்கு சென்று ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை பெற்றுக் கொண்டார். அவர் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.