

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் கோவில் ஊழியர்கள் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தி பல்வேறு வாசனை திரவியங்களை தெளித்தனர்.
கோவில் வளாகம் மற்றும் வெளிப்புறங்களில் பல்வேறு வகையான மலர்கள் மற்றும் வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் பூஜைகள் தொடங்கியது.
காலை 8 மணிக்கு வேத பண்டிதர்கள் கடந்த ஆண்டு வரவு-செலவு கணக்குகளை ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கும் ஐதீகம் நடந்தது. பின்னர் இந்த ஆண்டுக்கான புது பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
திருப்பதியில் நேற்று 72,332 பேர் தரிசனம் செய்தனர். 21,852 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.