தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா தொழிற்பேட்டை அருகே வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளை அழைத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகள், இது ரத்தம் இல்லை என்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சிவப்பு நிற ரசாயனம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இத்தகைய ரசாயனக் கழிவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, தொழிற்சாலைகள் ரசாயனங்கள் வெளியேற்றப்படுவதை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தனர்.