இந்தியா

பாஜக-வின் வீழ்ச்சி தொடங்கி விட்டது: மம்தா பானர்ஜி

பாஜக தலைவர்கள் தொகுதி மறுவரையறையை விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நாட்டை பிரிக்க விரும்புகிறார்கள் என மம்தா பனார்ஜி குற்றம்சாட்டினார்.

பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று தோல்வியடைந்தது. பாஜக- தலைமையிலான மத்திய அரசு 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டி பெற முடியாமல் போனது. இந்த நிலையில், பாஜக-வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஹவுராவில் உள்ள உலுபெரியா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-

பாஜக-வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. நாம் பாஜக-வை வீழ்த்திவிட்டோம். அவர்கள் அவமானப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. மற்றவர்களுடைய ஆதரவுகளுடன் அவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு இருக்கின்றனர். பாஜக தலைவர்கள் தொகுதி மறுவரையறையை விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நாட்டை பிரிக்க விரும்புகிறார்கள். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க நாம் ஒரு மசோதாவைக் கொண்டுவரத் தேவையில்லை.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.