இந்தியா

கேரளா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. தலைவர் மீது இவ்வளவு கிரிமினல் வழக்குகளா?

கேரளா மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர் கே. சுரேந்திரன், தன் மீது 242 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மாலை மலர்

கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 23-ந்தேதி ஆகும். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

பா.ஜ.க. சார்பில் கே. சுரேந்திரன் மஞ்சேஸ்வர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில் தன்மீது 242 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால் இந்த வழக்குகள் தன்மீது பதியப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

28 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்து உள்ளதாகவும், 9 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரான ஜார்ஜ் குரியன் கஞ்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தனக்கு எதிராக ஒரேயொரு கிரிமினல் வழக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 1.74 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளதாகவும், 2 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.