இந்தியாவில் கூட்டுறவு நிறுவனத்தால் நடத்தப்படும் ஓட்டுநர்களுக்கு சொந்தமான முதல் முன்பதிவு சேவையான ‘பாரத் டாக்ஸி’யை இன்று குஜராத்தில் உள்ள 14 முக்கிய நகரங்களில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
இந்த முயற்சி ஓட்டுநர்களை தற்காலிக பணியாளர்களாக கருதாமல், அவர்களை பங்குதாரர்களாக நிலை நிறுத்துகிறது.
இதன்மூலம் 20 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் எடுத்துக்கொள்ளும் தனியார் நிறுவனம் போல் அல்லாமல், ஓட்டுநர்கள் தங்கள் பயண வருமானத்தில் 100 சதவீதத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டு பயன்பெறுகிறார்கள்.
இந்த தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, “இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் இன்று ஒரு மிக முக்கியமான நாள். ஏனென்றால், இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதால் டாக்சிகளுக்கான தேவை பொதுவானதாகி விட்டது.
ஒவ்வொரு வீட்டையும் டாக்சிகளுக்கான தேவை சென்றடைந்துள்ளது. தனியார் துறையின் டாக்சி சேவைகளில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வந்தன. ஓட்டுநர்களும் பொதுமக்களும் தங்களது பிரச்சனைகளை தீர்க்கும்படி நம்பிக்கையுடன் என்னை சந்தித்தனர்.
ஆரம்பத்தில் அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது, ஆனால் வெறும் சட்டத்தால் எந்தவொரு பிரச்சனைக்கும் 100 சதவீதம் தீர்வு கிடைக்காது.
அதன்பிறகு கூட்டுறவு மாதிரியில் ஒரு டாக்சி சேவை தொடங்கப்பட்டால் சுரண்டல் அடிப்படையிலான வணிகம் தானாகவே முடிவுக்கு வரத்தொடங்கும் என்ற எண்ணம் எழுந்தது” என்று அவர் கூறினார்.